சென்னை - ராமேஸ்வரம் 7.5 மணி நேரத்தில்.. விரைவில் தொடங்குகிறது வந்தே பாரத் ரயில் சேவை..
ஆன்மீக தலமான ராமேஸ்வரத்திற்கு சென்னை எழும்பூரில் இருந்து வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்க ரயில்வே நிர்வாகம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த சேவை அடுத்த மாதம் இறுதிக்குள் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட வாய்ப்புள்ளது.
தற்போதுள்ள ரயில்கள் 10 மணி நேரத்திற்கும் மேல் எடுக்கும் நிலையில், புதிய வந்தே பாரத் ரயில் வெறும் 7.5 மணி நேரத்தில் பயணத்தை நிறைவு செய்யும் என உத்தேச அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை - ராமேஸ்வரம்: அதிகாலை 5.30 மணிக்கு எழும்பூரில் புறப்பட்டு, திருச்சி, காரைக்குடி, ராமநாதபுரம் வழியாக மதியம் 1.15 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.
ராமேஸ்வரம் - சென்னை: பிற்பகல் 2.30 மணிக்கு ராமேஸ்வரத்தில் புறப்பட்டு, இரவு 10.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
தெற்கு ரயில்வே அதிகாரிகள் ராமேஸ்வரம் மற்றும் புதிய பாம்பன் ரயில் பாலங்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், இந்த அதிவேக ரயில் சேவை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran