தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருப்பதால் தமிழக அரசியல் சூடுபிடிக்க துவங்கியிருக்கிறது. இனிமேல் பல திடீர் திருப்பங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் முதன் முதலாக 50 வருடங்களாக அதிமுகவில் பயணித்து வந்த செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த இரண்டு நாட்களாகவே பத்திரிகைகளிலும், செய்தி ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் இந்த விவகாரம் அதிகமாக எல்லோராலும் பேசப்பட்டு வருகிறது. ஓபிஎஸ் டிடிவி தினகரன் சசிகலா ஆகியோரை ஒருங்கிணைத்து அதிமுகவை வலுப்படுத்த வேண்டும் என செங்கோட்டையன் சொல்ல கோபமடைந்த எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கினார்.
அதன் பின்னரே செங்கோட்டையன் இந்த முடிவை எடுத்திருக்கிறார். மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக டிடிவி, ஓபிஎஸ் ஆகியோரை தவெகவில் செங்கோட்டையன் இணைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் எடப்பாடி பழனிச்சாமி தோற்கடிக்க வேண்டும் என்பது செங்கோட்டையனின் குறிக்கோளாக இருக்கிறதுஆனால் இதை விஜய் ஏற்றுக் கொள்வாரா என்பது தெரியவில்லை.
இந்நிலையில் தவெகவில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் இணைவார்களா? என இன்று செய்தியாளர்கள் செங்கோட்டையனிடம் கேட்டபோது அதுபற்றி நான் இப்போது பேச முடியாது.. இப்போது நான் அதுபற்றி பேசினால் பிரச்சினையாகிவிடும் என்று சொல்லிவிட்டு நழுவி சென்று விட்டார். அவர் சொன்ன பதிலை பார்க்கும்போது அந்த முயற்சியில் அவர் ஈடுபட்டிருப்பதாகவே கருதப்படுகிறது.