பான் இந்தியா சினிமா என்பதே ஒரு மோசடிதான்… இந்தி திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் காட்டமான விமர்சனம்!
ராஜமௌலியின் பாகுபலி படத்துக்குப் பிறகு இந்தியாவில் பேன் இந்தியா சினிமா என்ற சொல் அதிகம் விவாதிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது. பிராந்திய மொழிகளில் தங்களுக்கென்று ஒரு மார்க்கெட்டைக் கொண்டிருக்கும் நடிகர்கள் பிற மாநில மொழிகளிலும் சந்தையை விரிவாக்கி இந்தியா முழுவதும் பார்க்கப்படும் படங்களை உருவாக்க ஆசைப்படுகின்றனர்.
பாகுபலி, புஷ்பா மற்றும் கேஜிஎஃப் படங்களின் வெற்றிக்குப் பிறகு முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் இப்போது பேன் இந்தியா சினிமா என்ற ஆசையில் ஓடிக்கொண்டிருக்கின்றனர். இதற்காக கதையில் பல சமரசங்களையும் வணிக அம்சங்களையும் சேர்க்க வேண்டியக் கட்டாயத்துக்கும் ஆளாகியுள்ளனர்.
இது பற்றி பேசியுள்ள இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் “பேன் இந்தியா சினிமா என்பதே ஒரு மோசடி. ஒரு படத்தை உருவாக்க நான்கு ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்கிறார்கள். படத்துக்காக செலவிடப்படும் தொகை முழுவதும் அதன் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படுவதில்லை. அப்படித் தயாரிக்கப்படும் படங்களில் கூட ஒரு சதவீதம் படம்தான் வெற்றி பெறுகிறது. மேலும் புதுவிதமான கதை சொல்லல் இல்லாமல் வெற்றி பெற்ற படங்களைப் பின்பற்றும் போக்கு அதிகமாகியுள்ளது” எனக் கூறியுள்ளார்.