வியாழன், 21 ஆகஸ்ட் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 ஆகஸ்ட் 2025 (12:18 IST)

எடப்பாடி பழனிசாமி எதிரான வழக்கை விசாரிக்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது. இதன் மூலம், இந்த வழக்கின் விசாரணைக்கு இனி தடை இல்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்வை எதிர்த்து சூரியமூர்த்தி என்பவர் உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கட்சி விதிகளின்படி, பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தார்.
 
பின்னர், இந்த வழக்கில் தங்களது வாதங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என சூரியமூர்த்தி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, உயர்நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு விதித்திருந்த இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. வழக்கை ஆகஸ்ட் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
 
Edited by Mahendran