டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் இன்றும் சோதனை.. அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி..!
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம், பல புகார்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். அப்போது, சுமார் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக அப்பிரிவினர் தெரிவித்தனர்.
அந்த வழக்கின் தொடர்ச்சியாக, நேற்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் நடவடிக்கையில் இறங்கினர். டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக உள்ள விசாகன், சென்னை மணப்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது இல்லத்தில் காலை 7 மணியளவில் ஏழு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் பின்னர், விசாகனை அதிகாரிகள் தங்கள் வாகனத்தில் அழைத்துச் சென்று, நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். விசாரணை நேற்றிரவு வரை நீடித்தது. அதன் பின் விசாகன் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தார்.
இந்நிலையில், இன்று மீண்டும் விசாகன் வீட்டில் இரண்டாவது நாளாகவும் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை எப்போது முடியும் என்பதற்கான தகவல் வெளியாகவில்லை.
Edited by Mahendran