நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!
பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலாக, இந்திய ராணுவம் இன்று அதிகாலை ஒரு பெரிய நடவடிக்கையை மேற்கொண்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய பாதுகாப்பு படையினர் தாக்கினர்.
பஹவல்பூர் முதல் கோட்லி வரை உள்ள 9 முக்கிய பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. முப்படைகள் இணைந்து இந்த நடவடிக்கையை செயல்படுத்தின. இதில் 26 பேர் உயிரிழந்ததாகவும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல்கள், உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்புகளின் முகாம்கள்தான் இலக்காக இருந்தன.
இந்நிலையில், வயநாடு தொகுதி எம்.பி. பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "நமது வீரர்களைப் பற்றி நான் மிகுந்த பெருமைப்படுகிறேன். அவர்கள் நமது நாட்டின் சுதந்திரம் மற்றும் ஒற்றுமையை காக்க துணிவுடன் செயல்படுகிறார்கள். கடவுள் அவர்களை பாதுகாக்கட்டும். ஜெய் ஹிந்த்!" என கூறியுள்ளார்.
Edited by Mahendran