விளையாட்டில் அரசியலைக் கொண்டு வருவது அறம் இல்லாதது… பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் அதிருப்தி!
அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளைக் கடந்த 15 ஆண்டுகளாக விளையாடுவதில்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே மோதுகின்றன. சமீபத்தில் நடந்த பஹல்காம் தாக்குதலை அடுத்து இரு அணிகளும் நேற்று ஆசியக் கோப்பைத் தொடரில் மோதின.
இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. இந்த போட்டி முடிந்ததும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்கள் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. அதே போல டாஸ் போட்டபோதும் இரு அணிக் கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. கிரிக்கெட் போட்டிகள் முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்வது நூறாண்டு காலமாக நீடித்து வரும் வழக்கம்.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி இது சம்மந்தமாகத் தன்னுடைய கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில் “இன்றைய போட்டியில் விளையாட்டின் அறம் கடைபிடிக்கப்படாமல் போனது ஏமாற்றத்துக்குரியது. விளையாட்டில் அரசியலைக் கலப்பது விளையாட்டின் உணர்வுக்கு நேரெதிரானது. இனிவரும் காலங்களிலாவது வெற்றி பெறும் அணிகள் பண்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும்” எனப் பேசியுள்ளார்.