96 படத்தின் இரண்டாம் பாகம்… ஆர்வம் காட்டாத விஜய் சேதுபதி!
96 படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் பிரேம்குமார் அடுத்து கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் மெய்யழகன் என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் அவரின் முந்தைய படம் போல நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்த பட ரிலீஸின் போதே அவர் தன்னுடைய அடுத்த படம் 96 படத்தின் இரண்டாம் பாகம் என அறிவித்தார்.
அவரின் நேர்காணல் ஒன்றில் “என்னுடைய அடுத்த படம் என்னவென்பது இப்போது வரை முடிவாகவில்லை. 96 படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி வைத்துள்ளேன். முதலில் அதை படமாக எடுக்க வேண்டாம் என நினைத்தேன். ஆனால் எழுதி முடித்ததும் அதை படமாக பார்க்கும் ஆசை எனக்கே வந்துவிட்டது” எனக் கூறியிருந்தார். இரண்டாம் பாகத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல்ஸ் பிலிம் தயாரிக்க விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.
ஆனால் சமீபத்தில் இயக்குனர் பிரேம்குமார் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை விஜய் சேதுபதியிடம் கொடுக்க, அதைப் படித்த அவர் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை என்று தகவல் பரவி வருகிறது. இதற்கானக் காரணம் என்ன வென்பது குறித்து தெரியவில்லை.