வியாழன், 20 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 நவம்பர் 2025 (10:37 IST)

ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்.. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி..!

ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்.. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி..!
ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார். மேலும் அவர் தனது பேட்டியில் கூறியதாவது: 
 
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மூலம் ஆளுங்கட்சியினர் மாபெரும் ஜனநாயக மோசடியில் ஈடுபட திட்டமிடுவதாகவும், இந்த சிறப்புத் திருத்தப் பணிகளை உடனடியாக நிறுத்த கோரி, தங்கள் கட்சியான ம.தி.மு.க. சார்பிலும் நீதிமன்றத்தில் வாதம் வைக்கப்படும் என்றும் வைகோ அறிவித்தார்.
 
வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு, தி.மு.க.வின் ஆட்சி தொடர்வதற்கு ம.தி.மு.க. தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும், ஆட்சியில் பங்கு கேட்பது தொடர்பாக, கூட்டணியில் உள்ள சில கட்சிகள் பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால், தங்கள் கட்சி சார்பில் இதுவரை அதிகாரப் பங்கீடு குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும், அவ்வாறு எதுவும் கோர போவதில்லை என்றும் வைகோ தெளிவுபடுத்தினார்.
 
போதை ஒழிப்பு மற்றும் ஜாதி மோதல்களை தடுப்பதை வலியுறுத்தி, வரும் ஜனவரி 2-ஆம் தேதி திருச்சி முதல் மதுரை வரை 'சமத்துவ நடைபயணம்' மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார். இதில் பங்கேற்க தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
 
தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்திய அவர், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்பது மட்டும் போதாது என்று கூறினார்.
 
Edited by Mahendran