சமையல் எரிவாயு சிலிண்டர் e-KYC செய்ய ஆகஸ்ட் 16 கடைசி தேதி.. செய்யாவிட்டால் சிலிண்டர் கிடைக்காதா?
சமையல் எரிவாயு சிலிண்டர் பயனாளர்கள் தங்களது e-KYC விவரங்களை உடனுக்குடன் புதுப்பிக்குமாறு எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. அதன்படி, சமையல் எரிவாயு சிலிண்டருக்கான e-KYC-ஐ அப்டேட் செய்வதற்கான கடைசி அவகாசம் வரும் 16ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்த இறுதி நாளுக்குள் தங்களுடைய இ-கேஒய்சி பதிவை முடிக்காத வாடிக்கையாளர்களுக்கு மானியம் மற்றும் எரிவாயு விநியோகத்தில் தற்காலிக தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, பொதுமக்கள் எத்தகைய சிரமங்களையும் தவிர்க்கும் பொருட்டு, தங்களுக்கு அருகில் உள்ள கேஸ் ஏஜென்சி அலுவலகத்தையோ அல்லது ஆன்லைன் சேவைகளையோ பயன்படுத்தி உடனடியாக இந்தப் பணியை நிறைவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக, அரசின் சமையல் எரிவாயு மானியம் தடையின்றி தொடர்ந்து கிடைக்க இந்த இ-கேஒய்சி அப்டேட் செய்வது மிக அவசியமான ஒன்றாகும். ஆதார் கார்டு மற்றும் இதர விவரங்களை சரிபார்த்து இந்த செயல்முறையை மிக எளிமையாக முடிக்க முடியும்.
இந்த காலக்கெடு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத காரணத்தினால், பயனாளர்கள் அனைவரும் வரும் 16ஆம் தேதிக்குள் தங்களது e-KYC பணிகளை விரைந்து முடித்துவிடுவது நல்லது.
Edited by Siva
