1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 16 ஜூலை 2025 (10:24 IST)

பாஜகவை கூட்டணியில் சேர்த்ததால் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது: எடப்பாடி பழனிசாமி

பா.ஜ.க.வை கூட்டணியில் சேர்த்ததால் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது என்றும், பா.ஜ.க. மட்டுமின்றி பா.ம.க.வையும் எங்கள் கூட்டணியில் சேர்ப்போம் என்றும் எடப்பாடி பழனிசாமி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் எட்டு மாதங்கள் இருக்கும் நிலையில், இப்போதே ’ஓரணியில் தமிழ்நாடு" என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 
 
இந்த நிலையில், அவர் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டான் ஆகிய பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, "மக்களவைத் தேர்தலை போல எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க மாட்டார்" என ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், "இப்போது பா.ஜ.க.வை கூட்டணி சேர்த்ததும் அவருக்கு பயம் வந்துவிட்டது. நீங்கள் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தீர்களோ, அதே கட்சியுடன் தான் நாங்களும் கூட்டணி வைத்துள்ளோம். இதில் என்ன தவறு?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
 
"நீங்கள் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்தீர்கள், நாங்களும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தோம். நீங்கள் பா.ம.க.வுடன் கூட்டணி வைத்தீர்கள்,  நாங்களும் பா.ம.க.வுடன் கூட்டணியில்தான் இப்போது உள்ளோம். அதேபோல், நீங்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்தீர்கள், நாங்களும் இப்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருக்கின்றோம்" என்று தெரிவித்தார். 
 
1999 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருந்தது. 2001 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருந்தது. "நீங்கள் காங்கிரஸ் உடன் கூட்டணிக்கு மாறியவுடன் நாங்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளோம்" என்றும் அவர் பேசினார். அவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran