முன்னாள் காங். எம்எல்ஏவுக்கு ரூ.557 கோடி சொத்துகள்.. அமலாக்கத்துறை முடக்கியதால் பரபரப்பு..!
பணமோசடி வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட ஹரியானா முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தரம் சிங் சோக்கர் தொடர்பான ரூ. 557 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதன் மூலம் இந்த வழக்கில் முடக்கப்பட்ட மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ. 638 கோடியாக உயர்ந்துள்ளது.
மஹிரா இன்ஃப்ராடெக் உள்ளிட்ட, இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் சோக்கர் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு சொந்தமான சொத்துக்களும் இதில் அடங்கும் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, குர்கானில் உள்ள 35 ஏக்கர் நிலம், பல்வேறு பகுதிகளில் உள்ள வணிக மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் ஆகியவை இந்த மோசடி வழக்கில் முடக்கப்பட்டுள்ளன.
தரம் சிங் சோக்கர் தொடர்புடைய நிறுவனம், வீடுகள் கட்டி தருவதாகக் கூறி 3,700 பேரிடம் இருந்து ரூ. 616 கோடியை வசூலித்துவிட்டு, வீடுகளை வழங்காமல் வாடிக்கையாளர்களை ஏமாற்றியுள்ளது. மேலும், சோக்கர் போலி ஆவணங்களை தயாரித்து மக்களிடம் திரட்டிய பணத்தை மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, கடந்த மாதம் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva