1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 29 ஜூன் 2025 (13:41 IST)

சட்டக்கல்லூரிக்கு மாணவி செல்லாமல் இருந்திருந்தால் அந்த சம்பவம் நடந்திருக்காது: TMC எம்.எல்.ஏ சர்ச்சை கருத்து..!

மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் சட்டக்கல்லூரி மாணவி அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர், "சட்டக்கல்லூரி மாணவி சம்பவம் நடந்த இடத்திற்கு செல்லாமல் இருந்திருந்தால் அல்லது யாரையாவது உடன் அழைத்து சென்று இருந்தால் இந்தச் சம்பவம் நடந்திருக்காது" என்று கூறி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான மதன் மித்ரா என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம் சாட்டும் வகையில் பேசியிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. 
 
"அந்த மாணவி கல்லூரிக்கு செல்லாமல் இருந்திருந்தால் இந்தச் சம்பவம் நடந்திருக்காது. அல்லது எங்கு செல்கிறேன் என்று அவர் யாரிடமாவது சொல்லிவிட்டு இரண்டு பேரை உடன் அழைத்து சென்றிருக்கலாம். அவ்வாறு சென்றிருந்தால் இந்தச் சம்பவம் நடந்திருக்காது. குற்றம் செய்தவர்கள் மாணவி தனியாக இருப்பதை பயன்படுத்திக்கொண்டனர்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இது போன்ற நபர்களை எப்படி மக்கள் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்தார்கள் என்று சமூக வலைதளப் பயனர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். "பெண்களுக்குப் பாலியல் கொடுமை நடக்கக் கூடாது என்றால் வீட்டிலேயே இருந்து கொள்ள வேண்டுமா? பெண்கள் வெளியில் செல்லக் கூடாதா? 
 
தான் படிக்கும் கல்லூரி என்றுதானே நம்பி அந்த மாணவி சென்றார்? அந்த மாணவியை, அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டிக்காமல், அந்த மாணவியை குற்றம் சொல்வது கொடூரமானது" என்று பலர் கருத்துப் பதிவு செய்து வருகின்றனர்.

Edited by Siva