கர்நாடக முதல்வர் சித்தராமையா மாற்றப்படுகிறாரா? புதிய முதல்வர் டிகே சிவகுமார்?
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில் முதல்வர் மாற்றம் குறித்த குரல்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடையே எழ தொடங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோதே, சித்தராமையாவுக்கும், டி.கே. சிவகுமாருக்கும் இடையே முதல்வர் பதவிக்காக கடும் போட்டி நிலவியது. அப்போது, மூத்த தலைவர்களின் தலையீட்டால் நீண்ட இழுபறிக்கு பிறகு, டி.கே. சிவகுமார் துணை முதல்வராக பொறுப்பேற்றார். "முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், கடைசி இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவகுமாரும் முதல்வராகப் பதவி வகிப்பார்கள்" என்று அப்போது ஒரு மறைமுக உடன்பாடு எட்டப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
தற்போது, சித்தராமையா முதல்வராக பதவியேற்று இரண்டு ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், முதல்வர் மாற்றம் குறித்த பேச்சு மீண்டும் சூடுபிடித்துள்ளது. துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் ஆதரவாளரும், ராம்நகர் எம்.எல்.ஏ.வுமான இக்பால் உசேன், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று மேலிடத்தில் ஒரு உடன்பாடு உள்ளது. அதன்படி சித்தராமையா ஆட்சியை ஒப்படைப்பார், டி.கே. சிவகுமார் முதல்வராவார். இன்னும் இரண்டு முதல் மூன்று மாதங்களில் கட்சி மேலிடம் முடிவெடுக்கும்," என்று வெளிப்படையாக தெரிவித்தார்.
ஆனால், சித்தராமையாவின் ஆதரவாளர்களோ, அவரே முதல்வராகத் தொடர்வார் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். இதனிடையே, கடந்த வாரம் டெல்லிக்கு சென்ற சித்தராமையா, கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனை குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர், "சித்தராமையா தனது பதவியை தக்கவைத்துக்கொள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார். ஒருவேளை அது சாத்தியமில்லாமல் போனால், மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வராவின் பெயரை அடுத்த முதல்வராக பரிந்துரைக்க வாய்ப்புள்ளது," என கூறியுள்ளார்.
கர்நாடக அரசியலில் நிலவும் இந்தக் குழப்பமான சூழலைச் சமாளிக்க, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் தனித்தனியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
Edited by Mahendran