பெரும் எதிர்பார்ப்போடு பலரும் காத்திருந்த ஸ்குவிட் கேம் 3 நெட்ப்ளிக்ஸில் வெளியான நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் கேள்விக்குறியே!
உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற நடப்பு வெப் சிரிஸ்களில் ஒன்றாக இருக்கிறது கொரிய வெப் சிரிஸான ஸ்குவிட் கேம். ஹ்வாங் டாங் ஹ்யூக் எழுதிய டிஸ்டோபியன் சர்வைவல் த்ரில்லர் கதையான இதன் முதல் சீசன் 2019ல் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.
சங் ஜீ ஹுன் என்ற நபர் தனக்கு ஏற்பட்ட பொருளாதார, கடன் பிரச்சினைகளில் விடுபட முயன்றுக் கொண்டிருக்கும்போது, ஒரு கேம் விளையாடி வென்றால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அங்கு ஒவ்வொரு சுற்றிலும் தோற்பவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். ஆனால் வெல்பவர்களுக்கு பல கோடி பணம் கிடைக்கும் என்பதால் பலரும் இந்த விளையாட்டை விளையாடுகிறார்கள். கடைசியில் சங் ஜூ ஹூன் அதில் வென்று விட்டாலும், அந்த கேமை நடத்துபவர்களை கண்டுபிடித்து அந்த கேமை அழிக்க நினைக்கிறான்.
இரண்டாவது சீசனில், மீண்டும் கஷ்டப்பட்டு அந்த கேமிற்குள் நுழையும் ஹீரோ சங் ஜூ ஹுன் (நம்பர் 456) அங்கு விளையாட வந்திருக்கும் மற்றவர்களை பேசி ஆதரவு திரட்டி ஒரு புரட்சி படையை உருவாக்குகிறான். அந்த கேமிற்குள் 001 ஆக இருக்கும் அந்த கேமை நடத்தும் ஓ இல் நாம், வஞ்சகம் செய்து அந்த புரட்சியை தடுத்து விடுவதுடன் இரண்டாவது சீசன் முடிகிறது.
அதற்கு பிறகு என்ன ஆனது என்பதை விவரிக்கிறது தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது சீசன். நம்பர் 456 தவிர புரட்சி செய்த மற்ற அனைவரும் கொல்லப்படுகின்றனர். மீண்டும் 456 பிற விளையாட்டுகளை விளையாட வேண்டிய சூழல். அந்த கேமில் விளையாடி 222 நம்பர் கொண்ட கிம் ஜுன் ஹீ கர்ப்பமாக இருக்கிறாள். அவள் ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறாள். அந்த குழந்தையோடே அவள் மற்ற சுற்றுகளில் கலந்து கொள்ள வேண்டிய நிலையில் சங் ஜீ ஹூன் மற்றும் சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் உதவுகிறார்கள்.
இந்த கேம் முழுவதுமாக முடிவதற்குள் சங் ஜீ ஹுன், அந்த போட்டியை நடத்தும் ஃப்ரண்ட் மேனை கண்டுபிடித்தானா? போட்டி நடக்கும் தீவை டிடெக்டிவ் குழுவினர் கண்டுபிடித்தார்களா? என்று பலவிதமான கேள்விகளுக்கும் பதில் சொல்லும் விதமாக அமைந்துள்ள இந்த மூன்றாவது சீசன் மிகவும் மெதுவாக நகர்கிறது.
ஆர்வத்தோடு முதல் எபிசோடை பார்க்க அமர்ந்த பலரும் முதல் இரண்டு சீசன்களில் இருந்த பரபரப்பை மிஸ் செய்வதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து ஹீரோ ஏதாவது செய்வார் என்று ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருப்பதும், ஆனால் இறுதியில் சொதப்பலாக முடிவும் அயற்சியை தருகிறது. சில எபிசோட்களில் இந்த சீசனோடே முடிய வேண்டிய கதையை, அதன் பிரபலத்தன்மை காரணமாக மேலும் நீட்டிக்க விரும்பி இழுத்துக் கொண்டிருப்பதை உணர முடிகிறது.
அடுத்தடுத்த சீசன்களை இயக்க திட்டமிட்டுள்ளதால் இந்த சீசனில் எதிர்பார்த்த முடிவுகளை மாற்றியமைத்துள்ளதாக தெரிகிறது. இதுவரையிலான மூன்று சீசன்களில் கொரிய முகங்களையே பார்த்து வந்த நிலையில், அடுத்த சீசனில் உலகளாவிய அளவில் பல நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்பது போல கதை மாற்றப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த சீசனோடு இந்த கதை முடியும் என்று எதிர்பார்த்தவர்களுக்கும், சுவாரஸ்யத்தை அதிகம் எதிர்பார்த்தவர்களுக்கும் சற்று ஏமாற்றத்தையே அளித்துள்ளது இந்த மூன்றாவது சீசன்.
Edit by Prasanth.K