காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் கலந்து கொண்டது ஏன்? பிரேமலதா விளக்கம்..!
காங்கிரஸ் கூட்டத்தில் தே.மு.தி.க. துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்தார். அதில் அவர் கூறியதாவது:
பல வருடங்களாக தொடர்ந்து வரும் நட்பின் வெளிப்பாடு காரணமாக காங்கிரஸ் நிகழ்ச்சியி சுதீஷ் கலந்து கொண்டார். இதற்கும் அரசியல் கூட்டணிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
தே.மு.தி.க.வின் அடுத்த மாநாடு ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடைபெறவிருப்பதாகவும், அன்றுதான் கட்சியின் கூட்டணி நிலைப்பாடு குறித்து தெளிவாக அறிவிக்கப்படும் என்றும் பிரேமலதா குறிப்பிட்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் ஒரு தமிழக கட்சிதான் தலைமை தாங்க வேண்டும் என தே.மு.தி.க. விரும்புவதாகவும், "யார் வந்தாலும் மக்களுக்கு நல்லது செய்தால் வரவேற்போம். இது பல மாநிலங்களில் சாத்தியமாகியுள்ளது," என்றும் அவர் கூறினார்.
நடிகர் ஸ்ரீகாந்த் குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, "இதை ஸ்ரீகாந்த் மட்டும் செய்ததாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தமிழகமே போதை வஸ்துக்களால் மூழ்கி இருக்கிறது. இதை யாரும் மறுக்க முடியாத விஷயம். அவர்கள் செய்த தவறுக்கான தண்டனை அவர்களுக்குக் கிடைக்கும்," என்று கூறினார். மேலும், "இந்த அரசு போதை இல்லா, டாஸ்மாக் இல்லா, கள்ளச் சாராயம் இல்லா ஒரு தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்," என்றும் அவர் வலியுறுத்தினார்.
நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்து கேட்கப்பட்டபோது, "அவருக்கு நான் அறிவுரை கூற வேண்டிய வயது இல்லை. அவருக்கான முடிவை அவர்தான் எடுக்க வேண்டும்," என்று பிரேமலதா பதிலளித்தார்.
Edited by Siva