கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு 538 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும்.. பிசிசிஐக்கு நீதிமன்றம் உத்தரவு!
ஐபிஎல் தொடரில் 2010 ஆம் ஆண்டு 9 அணிகளாக எண்ணிக்கை உயர்த்தப்பட்ட போது 2011 ஆம் ஆண்டு கொச்சி டஸ்கர்ஸ் அணியும் இணைந்தது. ஆனால் ஒரே ஒரு சீசன் மட்டுமே விளையாடியது. அதன்பின்னர் கொச்சி டஸ்கர்ஸ் அணியை பிசிசிஐ தடை செய்தது.
அதற்குக் காரணமாக சொல்லப்பட்டது, கொச்சி டஸ்கர்ஸ் அணியால் சொன்ன நேரத்துக்குள் வங்கி கியாரண்டியைக் கொடுக்க முடியவில்லை என்பதுதான். ஆனால் அதற்கு ஸ்டேடியம் வசதி இல்லாதது மற்றும் குறைவான போட்டிகள் கேரளாவில் நடத்துவது போன்றவற்றை சொன்னது கொச்சி டஸ்கர்ஸ். ஆனாலும் பிசிசிஐ தன் முடிவில் உறுதியாக இருந்தது.
இதையெதிர்த்து கொச்சி டஸ்கர்ஸ் அணி வழக்கைத் தொடர்ந்தது. இது சம்மந்தமாக 2015 ஆம் ஆண்டு கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு 538 கோடி ரூபாய் இழப்பீடாகக் கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் அதையெதிர்த்து பிசிசிஐ மேல் முறையீடு செய்த நிலையில் நேற்று பிசிசிஐ வழங்கவேண்டிய இழப்பீட்டை கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு வழங்கவேண்டும் என நீதிபதி ஆர் ஐ சாக்லா உத்தரவிட்டுள்ளார். இதனால் சுமார் 538 கோடி ரூபாயை பிசிசிஐ செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளது.