நானாக இருந்தால் கோலியைக் கேப்டனாக அறிவித்திருப்பேன்… ரவி சாஸ்திரி அதிருப்தி!
கடந்த ஒரு மாதமாக கிரிக்கெட் உலகில் அதிகம் விவாதிக்கப்பட்டது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் திடீர் டெஸ்ட் ஓய்வு முடிவுதான். 36 வயதாகும் அவர் ஓய்வு முடிவை அறிவித்த போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக அமைந்தது. கோலியின் இந்த திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம் என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.
ஏனென்றால் அவரின் உடல்தகுதிக்குக் குறைந்தது இன்னும் 4 ஆண்டுகளாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கலாம். கோலி ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு முன்பாகவே இதுபற்றி அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கசிந்தன. அப்போது அவரிடம் பலரும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்பட்டது. பிசிசிஐ அவருக்கு உரிய மரியாதையைக் கொடுக்காததன் காரணமாகதான் அவர் இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி இதுபற்றி பேசும்போது “ நீங்கள் ஒரு இடத்தை விட்டுபோகும்போதுதான் உங்களின் அருமை மக்களுக்குப் புரியும். அவர் ஓய்வு பெற்ற முறையை நினைத்து நான் வருந்துகிறேன். அவருடன் தகவல் தொடர்பை இன்னும் சரியாக செய்திருக்கலாம் என நினைக்கிறேன். நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் ஆஸ்திரேலியா தொடருக்குப் பின்பு அவரைக் கேப்டனாக அறிவித்திருப்பேன்” எனக் கூறியுள்ளார்.