இந்த ஆண்டில் மட்டும் 1100 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி.. இந்த ஆண்டுக்குள் 1400 ஆகுமா?
பாகிஸ்தானின் பாதுகாப்பு படைகள் 2025 ஆம் ஆண்டில், இதுவரை 1,100க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்துள்ளன. இது, 1971 இந்திய-பாகிஸ்தான் போருக்கு பிறகு கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான உயிரிழப்பாகும் என்று உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பலுசிஸ்தானில் தீவிரமடைந்துள்ள கிளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய பதற்றங்களால் ஏற்பட்ட சண்டைகளே இந்த இழப்புக்கு காரணம். 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலுக்குப் பிறகு, கொல்லப்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் கிளர்ச்சியாளர்களின் விகிதம் அதிகரித்துள்ளது.
மே 9 மற்றும் 10 தேதிகளில் நடந்த 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல்களில் 11 விமானப்படை தளங்கள் மற்றும் இராணுவ தளங்கள் இலக்கு வைக்கப்பட்டன; இதில் 50க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஜனவரி முதல் அக்டோபர் வரை, இத்தாக்குதலை தவிர்த்து 195 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளனர். இதில் பல உயர் அதிகாரிகளும் அடங்குவர்.
தற்போதைய வன்முறையின் போக்கு தொடர்ந்தால், 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மொத்த உயிரிழப்பு 1,300 முதல் 1,400 வரை உயரக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Edited by Siva