கேர்ளாவில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட வழக்கில் துல்கர் சல்மானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மம்மூட்டியின் மகன் நடிகர் துல்கர் சல்மான். எனினும் தந்தையின் பிம்பத்தை பயன்படுத்திக் கொள்ளாமல் சினிமா துறையில் சொந்த முயற்சியில் நுழைந்து தற்போது பேன் இந்தியா அளவில் பல மொழி படங்களிலும் ஹீரோவாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பல முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.
நடிகர் துல்கர் சல்மான் பிரபலமான கேரளாவில் உள்ள உணவு பொருள் நிறுவனம் ஒன்றின் விளம்பர தூதராகவும் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் திருமண விழா ஒன்றில் உணவருந்திய பலர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கு அந்த தனியார் உணவு நிறுவனம் விற்பனை செய்து தரமற்ற பிரியாணி அரிசியே காரணம் என கேட்டரிங் நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு கேரள நுகர்வோர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் அந்த அரிசி நிறுவனத்தின் விளம்பர தூதராக உள்ள துல்கர் சல்மானை டிசம்பர் 3ம் தேதி நேரில் ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K