டி20 வரலாற்றில் முதல்முறையாக 3 சூப்பர் ஓவர்கள்.. 3வது சூப்பர் ஓவரில் நெதர்லாந்து வெற்றி..!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, நேபாளம் மற்றும் நெதர்லாந்து இடையிலான போட்டியில் மூன்று முறை சூப்பர் ஓவர் போடப்பட்ட நிகழ்வு கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
நேபாளம் மற்றும் நெதர்லாந்து இடையிலான டி20 போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 152 ரன்கள் எடுத்த நிலையில், இரண்டாவது பேட்டிங் செய்த நேபாள அணியும் 152 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து, மேட்ச் 'டை' ஆனதால் சூப்பர் ஓவர் போடப்பட்டது.
முதல் சூப்பர் ஓவரில் நெதர்லாந்து அணி 19 ரன்கள் எடுத்த நிலையில், நேபாள அணியும் 19 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து இரண்டாவது சூப்பர் ஓவர் போடப்பட்டது. இரண்டாவது சூப்பர் ஓவரில் நெதர்லாந்து அணி 17 ரன்கள் எடுத்த நிலையில், நேபாள அணியும் 17 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து, மூன்றாவது சூப்பர் ஓவர் வீசப்பட்டது. அதில் நேபாள அணி ரன் ஏதும் எடுக்காத நிலையில், நெதர்லாந்து அணி முதல் பந்திலேயே ஆறு ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக மூன்று சூப்பர் ஓவர்கள் வீசப்பட்டதும், அதில் மூன்றாவது சூப்பர் ஓவரில் ஒரு ரன்கூட நேபாளம் அணியை எடுக்க விடாமல் ஒரே ஒரு சிக்சர் அடித்து நெதர்லாந்து வெற்றி பெற்றதும் பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
Edited by Siva