இந்த தவறை பவுலர்கள் செய்தால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள்: ஐசிசி அறிவிப்பால் பரபரப்பு..!
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் பந்துவீச்சாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை முடித்து பந்துவீச வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததுதான். இந்த கட்டுப்பாட்டை மீறினால், அணியின் கேப்டன் மற்றும் அந்த அணியில் உள்ளவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் பந்துவீச்சாளர்களுக்கு நேரக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விதியின்படி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பந்துவீசும் அணிக்கான நேரக் கட்டுப்பாட்டை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, ஒரு ஓவர் நிறைவடைந்த 60 விநாடிகளுக்குள் அடுத்த ஓவரை தொடங்க வேண்டும். இல்லையெனில், இரண்டு முறை அந்த அணிக்கு எச்சரிக்கை விடப்படும். அதையும் மீறி, மூன்றாவது முறை பந்துவீச தாமதம் செய்தால், பேட்டிங் செய்யும் அணிக்கு ஐந்து ரன்கள் கூடுதலாக வழங்கப்படும் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
இந்த விதி ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் அமலாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே, இனிமேல் டெஸ்ட் போட்டி விளையாடும் அணிகள், ஒரு ஓவர் முடிந்த ஒரே நிமிடத்தில் அடுத்த ஓவரை தொடங்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva