ஜி7 மாநாட்டிலிருந்து ட்ரம்ப் அவசர வெளியேற்றம்: மத்திய கிழக்கு பதற்றம் காரணமா?
கனடாவில் நடந்த ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஒரு நாள் முன்னதாகவே வாஷிங்டனுக்குத் திரும்பிச் சென்றார். இஸ்ரேல் - ஈரான் மோதல் ஐந்தாவது நாளாக நீடிப்பதால், "மத்திய கிழக்கில் நடக்கும் நிகழ்வுகளே" இதற்கு காரணம் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ட்ரம்ப் தனது தேசிய பாதுகாப்பு குழுவினரை வெள்ளை மாளிகையின் நெருக்கடி மேலாண்மை மையமான 'சிச்சுவேஷன் ரூம்'-ல் தயாராக இருக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். "ஜி7 மாநாட்டில் நிறைய சாதிக்கப்பட்டது. ஆனால், மத்திய கிழக்கில் உள்ள சூழ்நிலை காரணமாக, அதிபர் ட்ரம்ப் இன்று இரவு தலைவர்களுடன் உணவு அருந்திய பின் புறப்படுவார்" என வெள்ளை மாளிகை செயலாளர் ட்வீட் செய்தார்.
நேற்று ட்ரம்ப் உடனடியாக தெஹ்ரானை காலி செய்யுமாறு வலியுறுத்தினார். மேலும், "நான் கையெழுத்திட சொன்ன அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். மனித உயிர்களின் வீணடிப்பு. எளிதாக சொன்னால், ஈரானுக்கு அணு ஆயுதம் இருக்கவே கூடாது. அனைவரும் உடனே தெஹ்ரானை விட்டு வெளியேற வேண்டும்!" என தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டார்.
இதற்கிடையே, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இஸ்ரேல்-ஈரான் இடையே போர்நிறுத்தத்திற்கான சாத்தியக்கூறுகளை ட்ரம்ப் பரிசீலிப்பதாக தெரிவித்தார். ஆனால், இஸ்ரேல்-ஈரான் மோதலை தணிக்கக் கோரும் ஜி7 தலைவர்களின் வரைவு அறிக்கையில் ட்ரம்ப் கையெழுத்திட மாட்டார் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Edited by Mahendran