செவ்வாய், 17 ஜூன் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 17 ஜூன் 2025 (08:16 IST)

ஈரான் அரசு டிவி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல்.. செய்தி வாசித்த பெண் அலறியடித்து ஓட்டம்..!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் இன்று திடீரென நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், ஈரானின் அரசு தொலைக்காட்சி தலைமையகம் குறிவைக்கப்பட்டது. இந்த அதிர்ச்சிகரமான தருணத்தில், செய்தியை நேரலையில் வாசித்துக் கொண்டிருந்த செய்தி வாசிப்பாளர், உயிர் பயத்தில் தனது இருக்கையை விட்டு ஓட்டம் பிடித்தார். இந்த பரபரப்பான சம்பவம் உலக மக்களை உலுக்கியுள்ளது.
 
தாக்குதல் நடைபெற்றபோது, கட்டிடத்தில் ஏற்பட்ட அதிர்வில், செய்தி வாசிப்பாளர் மட்டுமல்லாமல், ஒளிபரப்பில் ஈடுபட்டிருந்த தொழில்நுட்ப ஊழியர்களும் பாதுகாப்பிற்காக அங்கிருந்து வெளியேறினர். இந்த காட்சிகள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகி, உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. தாக்குதலுக்குப் பிறகு, தொலைக்காட்சி அலுவலகக் கட்டிடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதை ஈரானிய ஊடகங்கள் பதிவு செய்துள்ளன.
 
முன்னதாக, இஸ்ரேல், தெஹ்ரான் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு ராணுவ தளத்தையும் தாக்கியது. அப்போது, நகரின் பல பகுதிகளில் வெடிச் சத்தங்கள் கேட்டதாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
இஸ்ரேல் ராணுவம், தெஹ்ரான் மக்களை வீடுகளை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துவிட்டு, ராணுவ இலக்குகளைத் தாக்கி வருகிறது. தொடர்ந்து நான்காவது நாளாக நீடிக்கும் இந்த மோதலால், முழு அளவிலான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  

Edited by Siva