வியாழன், 2 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2025 (11:04 IST)

குவைத்தில் இருந்த காதலனை தமிழ்நாட்டில் இருந்து மிரட்டிய காதலி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

குவைத்தில் இருந்த காதலனை தமிழ்நாட்டில் இருந்து மிரட்டிய காதலி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த சரத்குமார் குவைத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில், காதலியால் ஏமாற்றப்பட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சரத்குமார் கடந்த 10 ஆண்டுகளாக திருப்புங்கூரை சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணை காதலித்து வந்தார். குவைத்துக்கு செல்வதற்கு முன்பிருந்தே இந்த காதல் தொடர்ந்துள்ளது. இந்நிலையில், சரத்குமார் திருமணம் செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு வீட்டாரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது, அந்த பெண் வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் சூரியமூர்த்தி என்பவரை விரும்புவதாகக் கூறி, சரத்குமாரைத் திருமணம் செய்ய முடியாது என்று நிராகரித்துள்ளார்.
 
சரத்குமாரின் தாய் சங்கீதா அளித்த புகாரில், தனது மகன் அந்த பெண்ணுக்கு 15 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் பணத்தை அனுப்பி வைத்துள்ளதாக கூறியுள்ளார். காதல் நிராகரிக்கப்பட்டதால், சரத்குமார் தனது பெற்றோரிடம் ஆடியோ செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அந்த பெண் தன்னை ஏமாற்றியதாக தெரிவித்துள்ளார்.
 
மேலும், இந்த பிரச்சனை குறித்துக் கேட்டபோது, துணை ஆய்வாளர் சூரியமூர்த்தி மற்றும் அந்தப் பெண் சங்கீதா ஆகியோர் தன்னை வீடியோ காலில் மிரட்டியதாகவும், இதனால் மனமுடைந்த சரத்குமார் குவைத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சரத்குமாரின் தந்தை மணவாளன், தாய் சங்கீதா, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். அதில், சரத்குமாரை ஏமாற்றிய சங்கீதா மற்றும் "பொய் வழக்கு போடுவேன்" என்று மிரட்டிய துணை ஆய்வாளர் சூரியமூர்த்தி ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
 
மேலும், வெளிநாட்டில் தற்கொலை செய்துகொண்ட சரத்குமாரின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடமும் அவர்கள் மனு அளித்தனர்.
 
Edited by Siva