மதுபோதையில் ஆபாச நடனம் ஆடிய ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் அர்ச்சகர்கள்.. போலீஸ் வழக்குப்பதிவு..!
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பெரிய மாரியம்மன் கோவிலில், அர்ச்சகர்கள் நான்கு பேர் மதுபோதையில் ஆபாச நடனம் ஆடிய வீடியோ ஒன்று வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்துப் புகார் எழுந்த நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவிலில் வரும் ஜூலை 2 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, கடந்த ஜூன் 16 ஆம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது. மேலும், பெரிய மாரியம்மன் கோவிலில் புனரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில்தான், கோவில் வளாகத்தில் அர்ச்சகர்கள் மது அருந்துவதாகவும், கோவிலுக்கு வரும் பெண்களிடம் அத்துமீறி நடந்துகொள்வதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில், தற்போது மதுபோதையில் கோவில் வளாகத்திலேயே அர்ச்சகர்கள் ஆபாசமாக நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பாபிஷேகத்திற்கு பிறகு கோவில் நிர்வாகம் சம்பந்தப்பட்ட நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் மது அருந்தி ஆபாசமாக நடனமாடிய நான்கு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவர்களில் மூன்று அர்ச்சகர்கள் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களைப் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Edited by Mahendran