10 கிமீ பயணம் செய்து சண்டை போட்ட 50 பள்ளி மாணவிகள்: இன்ஸ்டாகிராமால் வந்த பிரச்சனை..!
திருப்பூரில் உள்ள பள்ளி மாணவிகள் 50 பேர், சுமார் 10 கிலோமீட்டர் பயணம் செய்து, மற்றொரு பள்ளியில் படிக்கும் மாணவிகளுடன் நடுரோட்டில் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் பிளஸ் ஒன், பிளஸ் டூ படிக்கும் மாணவிகள் இன்ஸ்டாகிராமில் ஒரு குழுவை தொடங்கியுள்ளனர். அதேபோல், இன்னொரு அரசு பள்ளி மாணவிகளும் இன்ஸ்டாகிராமில் ஒரு குழுவை தொடங்கினர். இந்த இரண்டு குழுக்களில் எந்தக் குழு பெரியது என்பதில் இரு தரப்புக்கும் இடையே பிரச்சனை வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், திருப்பூர் மாநகராட்சி பள்ளியை சேர்ந்த சுமார் 50 மாணவிகள், 10 கிலோமீட்டர் பயணம் செய்து, அந்த அரசு பள்ளிக்குச் சென்று, அங்குள்ள மாணவிகளுடன் நடுரோட்டிலேயே சண்டையிட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை கண்ட பொதுமக்கள், மாணவிகளின் சண்டையை நிறுத்தும்படி கேட்டுக் கொண்ட நிலையில், தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மாணவிகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் காளிமுத்து என்பவர் பேசுகையில், "இரண்டு பள்ளி மாணவிகளுக்கும் ஆலோசனை வழங்க பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்," என்று தெரிவித்தார். இந்தச் சம்பவம் மாணவர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு மற்றும் அதன் விளைவுகள் குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளது.
Edited by Mahendran