1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 மே 2025 (17:04 IST)

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

Sadhguru

உலகளாவிய அளவில் சுற்றுச்சூழல் மற்றும் மனிதகுல மேம்பாட்டிற்காக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் வழங்கி வரும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், கனடா இந்தியா அறக்கட்டளை அவருக்கு 'CIF குளோபல் இந்தியன் விருதினை' வழங்கியது. 

 

கனடா - இந்தியா அறக்கட்டளை ( சிஐஎஃப்) உலகளவில் தலைமைப் பண்பு மற்றும் தொலைநோக்கு பார்வையோடு மனிதகுல மேம்பாட்டிற்காக இயங்கி வரும் இந்திய வம்சாவழி பேராளுமைகளை அடையாளம் கண்டு ஆண்டுதோறும் சிஐஎஃப் குளோபல் இந்தியன் விருதினை வழங்கி கௌரவித்து வருகிறது. 

 

அந்த வகையில் 2025-ஆம் ஆண்டுக்கான இவ்விருது சத்குரு அவர்களுக்கு கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி, கனடாவில் உள்ள ஒன்டாரியோ நகரில் கடந்த வாரம் நடைபெற்ற விழாவில் கனடா இந்தியா அறக்கட்டளையின் தலைவர் ரிதேஷ் மாலிக், கனடா நாட்டில் இயங்கும் ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் ஹிமதர் மதிபத்லா மற்றும் கோதாரி குழுமத்தின் தலைவர் நார்டன் கோதாரி ஆகியோர் சத்குருவிற்கு இவ்விருதினை வழங்கினர்.

 

உலகளவில் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிக்கும் வகையில் சத்குரு அவர்கள் மேற்கொண்டு வரும் பணிகளைப் பாராட்டியும், விழிப்புணர்வான உலகை உருவாக்க அவர் மேற்கொண்டு வரும் பணிகளை அங்கீரிக்கும் விதமாகவும் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. 

 

இதுகுறித்து கனடா இந்தியா அறக்கட்டளை தனது எக்ஸ் தள பதிவில் "கனடா இந்தியா அறக்கட்டளையின் ஆண்டின் சிறந்த உலகளாவிய இந்தியர் விருதை சத்குரு ஏற்றுக் கொண்டதற்கு, இந்திய-கனடிய சமூகத்தின் சார்பாக மிக்க நன்றி. விழிப்புணர்வான மற்றும் கருணைமிக்க மனிதகுலமே முன்நோக்கி இருக்கும் பாதை எனும் சத்குருவின் கருத்து ஆழமாக எதிரொலிக்கிறது “ எனத் தெரிவித்துள்ளது. 

 

சத்குரு அவர்கள் தனது எக்ஸ் தள பதிவில், "கனடா மற்றும் இந்திய நாடுகளின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு இந்திய சமூகம் பங்களிப்பதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் அரவணைப்பு மற்றும் விருந்தோம்பலுக்கு மிகவும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K