பவன் கல்யாண் சென்னையில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டட்டும்: அமைச்சர் சேகர்பாபு சவால்..!
பவன் கல்யாணுக்கு தமிழகத்துடன் என்ன சம்பந்தம், அவர் முடிந்தால் சென்னையில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டட்டும், அதன் பிறகு அவர் பேசுவதை நான் கேட்கிறேன் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு, "பவன் கல்யாணுக்கு தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? பவன் கல்யாண் சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டட்டும். பிறகு அவர் என்ன வேண்டுமானாலும் பேசட்டும், நாங்கள் கேட்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "தமிழ்நாட்டில் இதுவரை 117 முருகன் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. மேடை போட்டு மக்களை பிளவுபடுத்த பா.ஜ.க.வினர் முயற்சிக்கிறார்கள். நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆகிய இருவருக்கும் இடையே போட்டி நிலவுகிறது. ஒருவர் பச்சை துண்டு போட்டு இருக்கிறார், இன்னொருவர் காவி துண்டை சுற்றி இருக்கிறார். யார் வெற்றி பெறுவார்கள் என்பது இனிமேல்தான் தெரியும். இவர்கள் போட்டிக்காக நடத்திய மாநாடுதான் மதுரை முருகன் மாநாடு," என்றார்.
"அண்ணா, பெரியார், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். குறித்து பல்வேறு விமர்சனங்களை வைத்தவர் அண்ணாமலை. ஆனால், அடிமை சாசனத்தை பா.ஜ.க.விடம் அ.தி.மு.க. எழுதி வைத்துவிட்டு மேடையில் அமர்ந்து கொண்டுள்ளனர்," என்று அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சனம் செய்தார்.
Edited by Mahendran