அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக சேர்ந்தால் துரை வைகோவுக்கு மத்திய அமைச்சர் பதவியா? வைகோ விளக்கம்..!
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் ம.தி.மு.க. இணைந்தால் துரை வைகோவுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் கசிந்துள்ள நிலையில், அதனை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மறுத்துள்ளார். துரை வைகோவுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி தருவது தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் பா.ஜ.க.வுடன் நடத்தவில்லை என்று அவர் உறுதியுடன் கூறியுள்ளார்.
ஆனால், அதே நேரத்தில் மதிமுகவுக்கு எட்டு எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தால் தேர்தல் ஆணைய அங்கீகாரம் கிடைக்கும் என்றும், எனவே தி.மு.க.விடம் அதற்கு ஏற்ப கூடுதல் தொகுதிகளை கேட்டு பெறுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை, என்றும், தி.மு.க. எடுக்கும் முடிவை ஆதரிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
"துரை வைகோவுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி தருவதாக பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை என்றும், அப்படி இருந்தால் நானே வெளிப்படையாக சொல்லி விடுவேன்," என்றும் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
Edited by Mahendran