பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் பொதுச்செயலாளர் பதவியை ஈபிஎஸ் இழப்பார்: கே.என்.நேரு
பா.ஜ.க.வை கூட்டணியில் சேர்த்ததால், எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியை மட்டுமல்லாமல், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பதவியையும் எடப்பாடி பழனிச்சாமி இழந்து நிற்பார் என அமைச்சர் கே.என். நேரு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"கூட்டணி ஆட்சி, பா.ஜ.க. ஆட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு" என்றெல்லாம் தினமும் சொல்லி எடப்பாடி பழனிச்சாமியின் வயிற்றில் பா.ஜ.க. புளியைக் கரைக்கிறது. "அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள குழப்பங்கள் தேர்தல் வரை தொடர்ந்தால், அடுத்த மே தினத்தில் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியையும் இழப்பார்" என்று அவர் கூறினார்.
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உறுதியானாலும், தொண்டர்கள் மத்தியில் இந்தக் கூட்டணி இன்னும் உறுதியாகவில்லை என்றும், பா.ஜ.க. கூட்டணி தேர்தலுக்கு முன்பே 'ஆட்சி அதிகாரம், கூட்டணி அரசு, பா.ஜ.க. தலைமையிலான அரசு' என்று கூறி வருவது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 2026-ல் அமையப் போவது பா.ஜ.க. ஆட்சி" என்று அண்ணாமலை கூறியதும் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran