செவ்வாய், 17 ஜூன் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 17 ஜூன் 2025 (16:32 IST)

தந்தையர் தினத்தில் அப்பாவின் உடல் கண்டுபிடிப்பு.. கூடவே அம்மாவும்.. விமான விபத்தில் பெற்றோரை இழந்த மகன்..!

அகமதாபாத்தில் நடந்த பெரும் விமான விபத்தை தொடர்ந்து, பிரிட்டனில் வசிக்கும் அசோக்பாய் - ஷோபாபென் படேல் தம்பதியின் மகன் மிதன் படேல், நெகிழ்ச்சியூட்டும் அனுபவத்தை சந்தித்துள்ளார்.
 
தந்தையர் தினத்தில் அவரது தந்தை அசோக்பாயின் டி.என்.ஏ. உறுதிப்படுத்தப்பட்ட செய்தி கிடைத்தது. உடலை லண்டனுக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில், சற்று நேரத்தில் மருத்துவமனையிலிருந்து மற்றொரு அழைப்பு வந்தது. அதில், தாயார் ஷோபாபெனின் டி.என்.ஏ.வும் அடையாளம் காணப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
 
குஜராத்தை பூர்வீகமாக கொண்ட இந்தத் தம்பதி, 1978 முதல் பிரிட்டனில் வசித்து வந்தனர். இருவரும் அகமதாபாத் -லண்டன் விமானத்தில் பயணம் செய்த நிலையில் விபத்து நடந்ததும், மிதனும் அவரது சகோதரர் ஹேமனும் தங்கள் பெற்றோரின் உடல்களை அடையாளம் காணும் பணியில் உதவ அகமதாபாத் விரைந்து, டி.என்.ஏ. மாதிரிகளை வழங்கியிருந்தனர்.
 
வாழ்நாளில் பிரிக்க முடியாத தம்பதியினர், மரணத்திலும் இணைந்ததை உணர்ச்சியுடன் விவரித்த மிதன், "அம்மாவின் ஆன்மா, 'அசோக், நீங்கள் தனியாக திரும்பி செல்ல வேண்டாம். உயிருடன் இருந்தாலும், மரணத்திற்கு பின்னரும் நான் எப்போதும் உங்களுடனேயே இருப்பேன்' என்று அழைப்பது போல இருந்தது" என்று கூறினார். 
 
இதுவரை 135 பேரின் டி.என்.ஏ. மாதிரிகள் உறுதிப்படுத்தப்பட்டு, 101 உடல்கள் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
 
Edited by Siva