கரூரில் தவெக பிரச்சார கூட்டத்தில் சிக்கி 36 பேர் பலியான நிலையில் நிலைமை குறித்து உடனடி நடவடிக்கைகளுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் புறப்பட்டுள்ளார்.
முன்னதாக தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அவரை தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களும் கரூர் விரைந்துள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசல் பலி குறித்து கவலையுடன் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “தமிழ்நாட்டின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற விரும்புகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இரங்கல் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் “கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்” என கூறியுள்ளார்.
கமல்ஹாசன் இதுகுறித்து “கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றி திகைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K