தவெக மீது சில தவறுகள் இருந்தாலும் விஜய்யை குற்றவாளியாக்க கூடாது: அண்ணாமலை பேட்டி..!
கரூர் பொதுக்கூட்ட நெரிசல் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய்யை குற்றவாளியாக ஆக்க கூடாது என்று பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, இதுகுறித்து மேலும் கூறியதாவது:
கரூர் விவகாரத்தில் நீதியரசர்களை விமர்சிப்பது துரதிர்ஷ்டவசமானது. ஆளுநரை குறிவைத்து முதல்வர் சீண்டிப் பார்ப்பது சரியல்ல; ஆளும் கட்சி எல்லாவற்றையும் அனுசரித்து செல்ல வேண்டும். கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்குப்பதிவு செய்தால் அது சட்டப்படி நிலைக்காது. இது 'அல்லு அர்ஜுன் வழக்கு' போன்றது. அரசியல் ஆதாயத்திற்காக வேண்டுமானால் விஜய்யை ஓரிரு நாட்கள் கைது செய்ய முயற்சிகள் நடக்கலாம்.
"பா.ஜ.க.வுக்குத் தவெக-வுக்கு அடைக்கலம் கொடுக்கவோ, பாதுகாக்கவோ அவசியம் இல்லை. தவெக மீது சில தவறுகள் இருக்கத்தான் செய்கின்றன. அதற்காக விஜய்யை குற்றவாளி ஆக்க கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு." இந்த விவகாரத்தில் தமிழக அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் நியாயத்தை நியாயமாக பேசுகிறோம்.
வி.சி.க.விலிருந்து மக்கள் பெருமளவு வெளியேறுவதை பார்ப்பதால் ஏற்பட்ட கோபத்தில்தான் திருமாவளவன் மத்திய அரசையும், விஜய்யையும் விமர்சிக்கிறார். ராகுல் மணிப்பூர் போகும்போது பா.ஜ.க.வினர் கரூர் வரக்கூடாதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அஸ்ரா கார்க் அவர்கள் நல்ல அதிகாரி, அவரது விசாரணையை தாங்கள் நம்புவதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
Edited by Mahendran