1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: வெள்ளி, 27 ஜூன் 2025 (11:09 IST)

பஹல்காம் தாக்குதல் எங்கே? கையெழுத்து போட முடியாது..! - ராஜ்நாத்சிங் மறுப்பு!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூட்டு அறிக்கையில் கையெழுத்திட மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை தாக்கியது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்ட நிலையில் பின்னர் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.

 

இந்நிலையில் ஷாங்காய் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டிற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனா சென்றுள்ளார். இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் உள்ளிட்ட பல நாட்டு அமைச்சர்களும் கலந்துக் கொண்டனர். 

 

இந்த மாநாட்டில் பாகிஸ்தானை தாக்கி பேசிய ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும், பயங்கரவாதிகளும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

 

இந்த மாநாட்டின் கூட்டு அறிக்கையில் மற்ற நாட்டு அமைச்சர்கள் கையெழுத்திட்ட நிலையில், அதில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்த தகவல்கள் இடம்பெறாததால் ராஜ்நாத் சிங் அதில் கையெழுத்திடவில்லை. இதனால் கூட்டு அறிக்கை நிறைவேற்றப்படாமலே இந்த மாநாடு நடந்து முடிந்துள்ளது.

 

Edit by Prasanth.K