1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 18 ஜூலை 2025 (17:24 IST)

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் சமீபத்தில் ஒரு கல்லூரி மாணவி அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மேற்குவங்கத்தில் உள்ள ஐஐடி காரக்பூர் வளாகத்தில் ஒரு மாணவரின் சடலம் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சடலமாக மீட்கப்பட்ட மாணவரின் பெயர் ரிதம் முன்னா என்றும், அவருக்கு 21 வயதாகிறது என்றும், ஐஐடி காரக்பூர் வளாகத்தில் பொறியியல் படித்து கொண்டிருந்தார் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
ஐஐடி வளாகத்தில் மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட தகவல் அறிந்ததும், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடனடியாக சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த முதற்கட்ட விசாரணையில், மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாகவும், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்ததை அடுத்து, அவரது குடும்பத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
மாணவரின் மரணத்திற்கு இன்னும் காரணம் தெரியவில்லை என்றும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மாணவர் தூக்கில் தொங்கியதால், அவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது என்றும், விசாரணைக்கு பின்னர் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran