தேனிலவு கொலையில் சோனம் உறவினருக்கும் தொடர்பா? பண பரிவர்த்தனை பிரச்சனையா?
மேகாலயாவில் நடந்த அதிர்ச்சியூட்டும் தேனிலவு கொலை வழக்கு, இப்போது புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. கொல்லப்பட்ட ராஜா ரகுவன்ஷியின் மனைவி சோனம், கூலிக்கொலைக்காக மே 23 அன்று பணம் செலுத்தியிருந்தார். ஆனால் அந்தப் பணம், சோனம் உறவினர் ஜிதேந்திரா ரகுவன்ஷியின் வங்கிக் கணக்கிலிருந்து அனுப்பப்பட்டதாக தெரிய வந்தது.
இந்த நிதி பரிவர்த்தனை, ஜிதேந்திராவை சந்தேகத்திற்குள் இழுத்துவிட்டது. சோனமின் யுபிஐ கணக்கும் ஜிதேந்திரா பெயரிலேயே இருந்ததாகவும், அவரிடம் இருந்து குடும்பத் தொழிலுக்கே அந்தப் பணம் வந்ததாகவும் சோனமின் சகோதரர் கோவிந்த் விளக்கம் அளித்தார். இருப்பினும், சோனமுக்கு தனிப் பெயரில் கணக்கு ஏன் இல்லை என்ற கேள்வி எழுகிறது.
இதையடுத்து இது ஹவாலா முறைகேடா? குடும்பத்தில் ஏதேனும் நிழல் பண பரிவர்த்தனையா என்ற சந்தேகங்கள் எழுந்தன. ஆனால், கோவிந்த் அதனை மறுத்து, ஜிதேந்திரா ஒரு சாதாரண ஊழியர் எனவும் விளக்கினார்.
சோனம், அவரது காதலன் ராஜ் குஷ்வாஹா உள்ளிட்ட ஐந்து பேர் தற்போது காவலில் இருக்க, விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது. ஜிதேந்திராவின் பெயர் வெளிவந்ததும், இந்த கொலை வழக்கில் பணப் பரிவர்த்தனைகள் குறித்து புதிய கேள்விகள் எழுந்துள்ளன.
Edited by Siva