மேகாலயாவில் ஹனிமூன் சென்ற தம்பதிகள் மாயமான சம்பவத்தில் கணவன் பிணமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில் திடுக்கிடும் திருப்பம் இந்த வழக்கில் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ராஜா ரகுவன்ஷி என்பவருக்கும், சோனம் என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்த நிலையில், தேனிலவை கொண்டாட மேகாலயாவில் உள்ள சுற்றுலா தளமான சோரா எனப்படும் சிரபுஞ்சிக்கு சென்றுள்ளனர். அங்குள்ள சுற்றுலா வீடு ஒன்றில் தங்கியிருந்த அவர்கள் மே 24ம் தேதி நோங்கிரியாட் செல்வதற்காக சுற்றுலா வீட்டை காலி செய்துவிட்டு புறப்பட்டுள்ளனர்.
ஆனால் அதற்கு பிறகு அவர்களை காணவில்லை. உறவினர்கள் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த நிலையில், அவர்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் ராஜா ரகுவன்ஷி பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவர் அருகே பெண் ஒருவரின் ஆடைகளும் கண்டெடுக்கப்பட்டன.
அதை தொடர்ந்து ரகுவன்ஷியின் மனைவி சோனம் என்ன ஆனார்? அவர் கடத்தப்பட்டாரா? என்பது குறித்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் மாயமான சோனம், மேலும் 3 நபர்களுடன் பிடிபட்டுள்ளார். அவர்கள் காசிப்பூர் காவல்நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட்டபோது, சோனமுடன் கைதான நபர்கள்தான், ரகுவன்சியை கொன்றார்கள் என்பதும், ரகுவன்ஷியை கொல்ல சோனம்தான் அவர்களை பணி அமர்த்தினார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமாகி ஒரு மாதத்திற்குள் ரகுவன்ஷியை கொல்ல சோனம் திட்டமிட்டது ஏன் என்று விசாரணை நடைபெற்று வருகிறது. ,மேலும் இந்த குற்றத்தில் தொடர்புடையதாக சந்தேகமுள்ள நபர்களையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Edit by Prasanth.K