1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: ஞாயிறு, 8 ஜூன் 2025 (12:41 IST)

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

உத்தர பிரதேசத்தில் பக்ரீத் திருநாளில் ஆடு வெட்டுவதற்கு பதிலாக முதியவர் ஒருவர் தன்னைத்தானே வெட்டி பலிக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இஸ்லாமிய திருநாளான பக்ரீத் நேற்று உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்பட்டது. இந்நாளில் ஆடுகளை பலியிட்டு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது வழக்கம். இந்தியா முழுவதும் பல இடங்களிலும் ஆடுகள் பலியிடப்பட்டன. 

 

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் தியோரியா பகுதியில் பக்ரீத் நாளான நேற்று 60 வயது இஸ்லாமிய முதியவர் இஷ் முகமது கழுத்து அறுபட்ட நிலையில் சாலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் அவர் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்தார்.

 

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் முதியவர் வீட்டில் இருந்து கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. முதியவர் தான் சாகும் முன் எழுதியிருந்த அந்த கடிதத்தில் “ஒரு மனிதன் குழந்தையை போல ஆட்டை வளர்த்து அதை அல்லாஹ்வுக்காக பலியிடுகிறான். நான் அல்லாஹ்வின் பெயராலும், அவருடைய தூதரின் பெயராலும் என்னுடைய உயிரை பலியாகக் கொடுக்கிறேன்” என கூறப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அந்த கடிதம் முதியவர் இஷ் முகமதுவின் கையெழுத்துதானா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Edit by Prasanth.K