சவுதி அரேபியாவிற்குள் செல்வதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரவி வரும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்ட நிலையில் துருக்கி உள்ளிட்ட பல இஸ்லாமிய நாடுகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்றது உலகளாவிய அரசியல் வெளியில் அதிர்ச்சியாக அமைந்தது. இந்நிலையில் தற்போது இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளின் விசாக்களுக்கு சவுதி அரேபியா தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த தடை பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு இல்லை என கூறப்பட்டது.
பாகிஸ்தானுடனான உறவின் காரணமாக இந்தியர்களை சவுதி வஞ்சிப்பதாக சிலர் சமூக வலைதளங்களில் பேசத் தொடங்கியுள்ளனர். ஆனால் அப்படியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் சவுதி வெளியிடவில்லை.
இந்நிலையில் இந்த தகவல் குறித்து ஏஎன்ஐ வெளியிட்டுள்ள தகவலின்படி, சவூதி அரேபியாவிற்கு இந்தியர்கள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டதாக வெளியான செய்திகள் தவறானவை. இது குறித்து சவுதி அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. நடைமுறையில், ஹஜ் பருவத்தில், இந்த சீசனில் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக குறுகிய கால விசாக்களில் தற்காலிக கட்டுப்பாடுகள் உள்ளன, அவை ஹஜ் சீசனோடு முடிவடைகின்றன என்று கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K