1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 21 மே 2025 (12:20 IST)

4 மாத குழந்தையை கடித்துக் கொன்ற வளர்ப்பு நாய்! ராட்வெய்லரை தடை செய்ய கோரிக்கை!

Rottweiler attack in india

குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 4 மாத குழந்தையை வளர்ப்பு நாய் ஒன்று கடித்துக் கொடூரமாக கொன்ற சிசிடிவி காட்சி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 

இந்தியா முழுவதும் வளர்ப்பு நாய்களாலும், தெரு நாய்களாலும் மக்கள் பலர் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்களும், பலியாகும் சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் குஜராத்தில் நடந்துள்ளது.

 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 4 மாத குழந்தை ஒன்றுடன் குழந்தையின் அத்தை அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் அமர்ந்து அக்கம் பக்கத்தினருடன் பேசி கொண்டிருக்கிறார். அப்போது அங்கு ராட்வெய்லர் வளர்ப்பு நாயுடன் ஒரு நபர் வருகிறார். திடீரென அந்த நாய் அங்கு அமர்ந்திருப்போரை பார்த்து குலைத்ததுடன் வேகமாக பாய்ந்து சென்று 4 மாத குழந்தையை கடித்துக் குதறியது.

 

அங்கிருந்தவர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்த நாயை விரட்ட முயன்றனர், இதில் குழந்தையையும், குழந்தையின் அத்தையையும் அந்த நாய் பலமாக கடித்ததில் குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போதே பரிதாபமாக உயிரிழந்தது. அத்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இந்த சம்பவத்தில் நாயின் உரிமையாளரை கைது செய்துள்ளதுடன், நாயையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் ராட்வெய்லர் போன்ற அபாயகரமான நாய்களை இந்தியாவில் வளர்ப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என மக்கள் பலர் கோரிக்கை விடுக்கத் தொடங்கியுள்ளனர்.

 

Edit by Prasanth.K