1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 30 ஜூன் 2025 (08:05 IST)

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி விவகாரம்.. குற்றவாளி 12 வருடங்களுக்கு முன்பே கிரிமினலா?

கொல்கத்தாவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், மிஸ்ரா என்ற முக்கிய குற்றவாளியும், இரண்டு சட்ட கல்லூரி மாணவர்களும், கல்லூரியின் செக்யூரிட்டியும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், முக்கிய குற்றவாளியான மிஸ்ரா, 12 வருடங்களுக்கு முன்பே குற்ற பின்னணி கொண்டவர் என்பது தற்போது தெரியவந்துள்ள நிலையில், இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சட்ட கல்லூரியில் படிக்கும்போதே மிஸ்ரா வன்முறைகளில் ஈடுபட்டுள்ளார் என்றும், கடந்த 2013 ஆம் ஆண்டு கேட்டரிங் ஊழியர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார் என்றும் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால், இந்த வழக்கில் போலீசார் மெத்தனமாக இருந்ததால், சமாதானமாக இந்த வழக்கு தீர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
அதன் பிறகு, 2017 ஆம் ஆண்டு மிஸ்ரா மீண்டும் பல கிரிமினல் வேலைகளை செய்ததாகவும், கல்லூரி வளாகத்திலேயே அவர் மாணவர்களை மிரட்டி பணம் பறித்தல் உட்பட பல்வேறு குற்றங்கள் செய்ததாகவும் தெரிகிறது. அதுமட்டுமின்றி, கல்லூரியில் படிக்கும்போதே பல மாணவிகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகவும், அவர் மீது புகார் அளிக்கப் பல மாணவிகள் முன்வரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
 
கடந்த 2013 ஆம் ஆண்டு அவர் முதல் குற்றம் செய்தபோதே அவரை போலீசார் தகுந்த முறையில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருந்தால், அதன் பின் நடந்த சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை உட்பட, எந்த குற்றமும் நடந்திருக்காது என்றும், இது முழுக்க முழுக்க கொல்கத்தா காவல்துறையின் பொறுப்பற்ற தன்மையே காரணம் என்றும் பொதுமக்கள் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Siva