1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 12 ஜூன் 2025 (08:28 IST)

எரியும் கப்பலை கயிறு கட்டி இழுக்க முயற்சிக்கும் இந்திய கடலோர படை.. என்ன காரணம்?

கொழும்பு துறைமுகத்திலிருந்து மும்பை நோக்கிச் சென்ற சிங்கப்பூர் கப்பல், கடந்த 9ஆம் தேதி கேரள மாநிலம் கண்ணூர் அருகே திடீரெனத் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. கப்பலில் இருந்த 22 ஊழியர்களில் 18 பேர் மீட்கப்பட்டு மங்களூருவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீக்காயங்களுடன் படுகாயம் அடைந்த 2 ஊழியர்களுக்கு மங்களூரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாயமான 4 ஊழியர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
 
இந்த நிலையில் கப்பலில் எரியும் தீயை அணைக்க இந்தியக் கடலோரக் காவல் படைக்கு சொந்தமான கப்பல்கள் தொடர்ந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து வருகின்றன. தீ விபத்துக்குள்ளான கப்பல் நகர்ந்துகொண்டே இருப்பதால், தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
 
இருப்பினும் கப்பலில் சுமார் 40 சதவிகிதம் தீ அணைக்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஆனாலும், கப்பலில் இருந்து தொடர்ந்து கரும்புகை வெளிவந்துகொண்டே இருக்கிறது. கப்பலில் 2000 டன் எரிபொருளும், 240 டன் டீசலும் இருப்பதால், அவற்றில் தீ பரவி வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், கப்பலை கட்டி இழுத்து செல்வதற்காக, முன்பக்கத்தில் பெரிய கயிறு கட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
இது குறித்துக் கேரளப் பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் செயலாளர் சேகர் குரியகோஸ் கூறுகையில், "எம்.இ.ஆர்.சி. போர்பந்தர் குழுவினர் இந்தியக் கடலோரக் காவல் படை ஹெலிகாப்டர் உதவியுடன் கப்பலில் இறங்கியுள்ளனர். மேலும், கப்பலின் முன்பகுதியில் உள்ள ஹூக் பகுதியில் பெரிய கயிறு கட்டியுள்ளனர். அந்தக் கயிறு 'வாட்டர் லில்லி' எனப்படும் சிறிய இழுவைக் கப்பலில் கட்டப்பட்டுள்ளது. கப்பலை விரைவில் ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லும் முயற்சியின் ஒரு பகுதியாக இது செய்யப்பட்டுள்ளது. எரியும் கப்பலில் இறங்கி இது போன்று செய்யப்பட்டது மிகப்பெரிய சாதனை," என்றார். 
 
தற்போது கேரளாவிலிருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்தக் கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லும் முயற்சி நடந்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva