1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 மே 2025 (18:20 IST)

வேலூர் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் .. சிலம்பாட்டம், மயிலாட்டம் பாரம்பரிய நடனங்கள்

வேலூர் மாவட்டத்தில் பிரபலமான கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் இன்று மிகப்பெரிய உற்சாகத்துடன் நடைபெற்றது. காலை 5:30 மணிக்கு, குடியாத்தம் தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோவிலிலிருந்து அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
 
இந்த ஊர்வலத்தில் சிலம்பாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், கரகாட்டம் போன்ற பாரம்பரிய நடனங்கள் நடந்தன. பம்பை, உடுக்கை, மேள-தாளம் இசையுடன் ஊர்வலம் தொடங்கியது. பழைய ஆஸ்பத்திரி ரோடு, காந்தி ரோடு மற்றும் ஜவஹர்லால் தெருவின் வழியாக ஊர்வலம் சென்று, இறுதியில் கெங்கையம்மன் கோவிலில் நிறைவடைந்தது.
 
ஏராளமான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தரணம்பேட்டை முதல் முதல்கோபாலபுரம் வரை சாலையின் இரு பக்கங்களிலும் நின்று கெங்கையம்மனை கண்டு ஆசீர்வதித்தனர். வேலூர் மட்டும் இல்லாமல் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்தும் பல லட்சம் பக்தர்கள் ஈர்க்கப்பட்டனர்.
 
ஊர்வல பாதையில் பக்தர்கள் அம்மனுக்கு பூமாலை சூட்டி, கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து கௌரவம் காட்டினர். சுமார் 3 கிலோமீட்டர் ஊர்வலத்தின் முடிவில், அம்மன் சிரசு கெங்கையம்மன் கோவில் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட சண்டாளச்சி உடலில் பொருத்தப்பட்டது.
 
இன்று இரவில் அம்மன் சிரசு பிரிக்கப்பட்டு, கவுண்டன்ய ஆற்றங்கரையில் அலங்காரம் செய்யப்பட்டு மீண்டும் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Edited by Mahendran