1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 24 ஜூன் 2025 (18:59 IST)

எக்சிமா தோல் நோய்: அறிகுறிகள், காரணங்கள், தீர்வுகள்!

Skin Itching
கரப்பான் நோய், பொதுவாக 'எக்சிமா' என அழைக்கப்படும் இது, தோலில் ஏற்படும் ஒரு வகை அலர்ஜி ஆகும். இந்த தோல் பிரச்சனை எந்த வயதினரையும் பாதிக்கலாம். குறிப்பாக, அலர்ஜி அல்லது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இந்நோய் வர அதிக வாய்ப்புள்ளது. 
 
கைகள், கழுத்து, முழங்கைகள், கணுக்கால், முழங்கால்கள், பாதம், முகம், காதுகளுக்குள்ளும் அதைச் சுற்றியும், உதடுகள், மார்பகங்கள், பிறப்புறுப்பைச் சுற்றியும் இந்த எக்சிமா வரலாம். பொதுவாக, கால் பாதங்களின் மேல் பகுதியிலும், தொடை இடுக்குகளிலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.
 
இந்த நோய் தாக்கிய ஆரம்ப கட்டத்தில், தோல் வறண்டு போய், பின் கடுமையான அரிப்பு எடுக்கும். அரித்த பிறகு, அந்த இடம் சிவந்து வீங்கிவிடும். சில சமயங்களில் கொப்புளங்களும், நீர் வடிதலும் ஏற்படலாம். எரிச்சலை தூண்டும் பொருட்கள் தோலில் படும்போது இந்த அலர்ஜியின் அறிகுறிகள் உடனடியாக தெரிய ஆரம்பிக்கும்.
 
எக்சிமா வந்து போகக்கூடியது. குணமாகிவிட்டது என்று நினைக்கும்போது, மீண்டும் ஏதேனும் எரிச்சலூட்டும் பொருள் பட்டால், நோய் தீவிரமடைந்து, தோல் தடித்து, வெடித்து, புண்ணாகிவிடும். பலருக்கு இந்த கரப்பான் நோய் நீண்ட காலமாகவே இருக்கும். இதை 'நாள்பட்ட தோல் அரிப்பு நோய்' என்று அழைக்கிறார்கள்.
 
குடும்பத்தில் யாருக்காவது எக்சிமா இருந்தால், மற்றவர்களுக்கும் வர வாய்ப்புள்ளது. செல்லப்பிராணிகளின் முடி, ஆஸ்துமா, சில உணவுப் பொருட்கள், சிகரெட் புகை, காற்று மாசுபாடு, கம்பளித் துணிகள், சில சருமப் பூச்சுகள், மற்றும் சில துணி வகைகளும் இந்நோயை உண்டாக்கலாம். மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு போன்றவையும் எக்சிமாவைத் தூண்டும் காரணிகளாக அமைகின்றன.
 
இந்நோய் வந்தவர்கள், தோலை வறண்டு போக விடாமல், தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை கிரீம்களை பயன்படுத்தலாம். தோல் அலர்ஜியை தூண்டும் பொருட்கள் மற்றும் உணவுகளை தவிர்க்க வேண்டும். நிரந்தரத் தீர்வு பெற, சரும நோய் சிகிச்சை நிபுணரை அணுகி சிகிச்சை பெறுவதே சிறந்தது.
 
Edited by Mahendran