சூர்யகுமார் யாதவ்வுக்கு 30 சதவீத போட்டிக் கட்டணம் அபராதம்.. ஐசிசி உத்தரவு!
நடந்து வரும் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்த்து விளையாடிய இரண்டு போட்டிகளையும் மிக எளிதாக வென்றது. இந்த போட்டியில் பரபரப்பு இல்லை என்றாலும் போட்டிக்கு வெளியே இருநாட்டு வீரர்களும் பேசிக்கொள்வதிலும் நடந்துகொள்வதிலும் பல சர்ச்சைகள் உருவாகி வருகின்றன.
இந்த தொடரில் செப்டம்பர் 14 ஆம் தேதி நடந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் வென்ற பிறகு இந்தியக் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தன்னுடைய சமூகவலைதளப் பதிவில் “இந்த வெற்றியை பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நமது ராணுவத்தினருக்கும் சமர்ப்பிக்கிறோம்” எனக் கூறியிருந்தார். இந்நிலையில் அவரின் இந்த பதிவு விளையாட்டின் நற்பெயருக்குத் தீங்கு விளைவிப்பதாக உள்ளதாகவும், அவரை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் புகார் அளித்தது.
அந்த புகாரை ஏற்றுக் கொண்ட ஐசிசி இப்போது சூர்யகுமார் யாதவ்வின் போட்டி ஊதியத்தில் 30 சதவீதம் அபராதமாக விதித்துள்ளது. அதே போல ஆத்திரமூட்டும் வகையில் இந்தியா- பாகிஸ்தான் தாக்குதல் குறித்து சைகை செய்ததால் ஹாரிஸ் ரவுஃப் மற்றும் சாஹிப்சாதா ஃப்ர்ஹான் ஆகியோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.