அரசு மருத்துவமனையில் ரூ.70,000 சம்பளம்.. ஆனால் பணிக்கு வராமல் காலேஜ் சென்ற டாக்டர்.. அதிரடி நடவடிக்கை..
கர்நாடகா மாநிலம் பாகல்கோட் பகுதியில் உள்ள நம்ம கிளிக்கில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வரும் டாக்டர் அங்கிதா யரகல், முறையான அனுமதியின்றி முதுகிலை மருத்துவ படிப்பை தொடர்ந்துகொண்டே மாதந்தோறும் ரூ.70 ஆயிரத்திற்கும் அதிகமான அரசு சம்பளத்தை பெற்று வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாகல்கோட் எம்.எல்.ஏ உமேஷ் மெட்டியின் உறவினரான இவர், கடந்த மார்ச் 3 முதல் செப்டம்பர் வரை நம்ம கிளிக் பணிக்கு வராமல் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்தியதாகவும், அரசு பணியில் இருந்துகொண்டு தனியார் கல்லூரியில் படித்தது விதிகளுக்கு எதிரானது எனவும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக பாகல்கோட் ஜில்லா பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி கஜானன் பாலே முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டும் அவர் கலந்துகொள்ளவில்லை. இதனால் செப்டம்பர் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு அறை எண் 11-ல் மீண்டும் நேரில் ஆஜராகுமாறு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர் பெற்ற முழு சம்பளமும் திரும்ப பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கர்நாடக மருத்துவக் கவுன்சில் மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு இச்சம்பவம் குறித்து புகாரளிக்கப்பட உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மாவட்ட சுகாதார அலுவலர் ராஜ்குமார் யரகல் அவரை பணியில் இருந்து விடுவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Edited by Siva

