கரப்பான் பூச்சியை கொல்ல முயன்றபோது நடந்த விபரீதம்.. பெண் பரிதாப பலி!
தென் கொரியாவின் ஓசன் நகரில் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனது வீட்டில் கரப்பான் பூச்சியை கொல்லும் முயற்சியில் தவறுதலாகத் தீ விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லைட்டர் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய ஸ்பிரே ஆகியவற்றை பயன்படுத்தி அவர் உருவாக்கிய தற்காலிக தீ, கரப்பான் பூச்சியின் மீது வைத்தபோது வேகமாக பரவி, அடுக்குமாடி கட்டிடத்தை பற்றிக் கொண்டது.
இந்த விபத்தில், ஐந்தாவது தளத்தில் வசித்த 30 வயது சீனப் பெண் ஒருவர் உயிரிழந்தார். அத்தம்பதியினர் தங்கள் இரண்டு மாத குழந்தையை ஜன்னல் வழியாக அண்டை வீட்டாரிடம் ஒப்படைத்துவிட்டு தப்ப முயன்றபோது, அப்பெண் தவறி விழுந்து உயிரிழந்தார். மேலும், தீ விபத்தால் ஏற்பட்ட புகையால் எட்டுப் பேர் மூச்சுத்திணறலுக்கு ஆளாகினர்.
அலட்சியத்தால் மரணத்தை விளைவித்தல் மற்றும் தீ வைத்தல் ஆகிய குற்றங்களுக்காக சம்பந்தப்பட்ட பெண் மீது கைது ஆணை பிறப்பிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.
Edited by Siva