PUBG விளையாட கூடாது என கண்டித்த தாயை துப்பாக்கியால் சுட்ட சிறுவன்.. 100 ஆண்டுகள் சிறை..!
ஆன்லைன் விளையாட்டான PUBG விளையாடியதை கண்டித்ததால் ஆத்திரமடைந்த இளைஞன் சிறுவன், தனது தாய் மற்றும் மூன்று சகோதர, சகோதரிகளை சுட்டு கொன்ற வழக்கில், நீதிமன்றம் அவனுக்கு 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கஹ்னா என்ற பகுதியில் வசித்து வந்த 14 வயது ஜைன் அலி, ஒரு தீவிரமான PUBG விளையாட்டு வீரர். தனது நேரத்தின் பெரும்பகுதியை இந்த விளையாட்டிலேயே செலவழித்து வந்ததால், அவரது தாய் நஹீத் முபாரக் அவரை அடிக்கடி கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் 2022-ஆம் ஆண்டு சம்பவம் நடந்த அன்று, பல மணி நேரம் பப்ஜி விளையாடிய ஜைன், ஒரு இலக்கை அடைய முடியாமல் கோபமடைந்துள்ளார். அதே நேரத்தில், அவரது தாயும் அவரை கண்டித்ததால், ஆத்திரம் அடைந்த ஜைன், வீட்டில் இருந்த தனது தாயின் கைத்துப்பாக்கியை எடுத்து தாய் நஹீத் முபாரக், சகோதரன் தைமூர் மற்றும் சகோதரிகள் மஹ்னூர் , ஜன்னத் ஆகிய நால்வரையும் சுட்டுக் கொன்றுள்ளான்.
இதுகுறித்த வழக்கு, லாகூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜைன் அலிக்கு, அவரது வயது காரணமாக, ஒவ்வொரு கொலைக்கும் 25 ஆண்டுகள் என, மொத்தம் 100 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ரியாஸ் அகமது தீர்ப்பளித்தார்.
Edited by Mahendran