1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 10 ஜூன் 2025 (08:22 IST)

கண்ணீர் புகை, ரப்பர் குண்டுகள்.. வலுக்கிறது அமெரிக்காவில் போராட்டம்.. டிரம்ப் பதவிக்கு சிக்கலா?

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், சுமார் 2000 பாதுகாப்புப் படையினர், போராட்டத்தை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் கண்ணீர் புகை மற்றும் ரப்பர் குண்டுகளால் துப்பாக்கிச் சூடு நடத்தியும், போராட்டக்காரர்கள் கலையாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
அதிபர் ட்ரம்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து வரும் போராட்டம் மேலும் வலுவடைந்துள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வசிப்பவர்களை ட்ரம்ப் அரசு வெளியேற்றி வரும் நிலையில், இது சட்டவிரோதமானது என்று இந்த போராட்டக்காரர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், போராட்டக்காரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
 
இந்த விவகாரத்தால் மேலும் சில நகரங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், போலீசார் மீது கல்வீச்சுகள், வாகனங்களை தீக்கரையாக்குதல், பட்டாசுகளை வீசும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற பாதுகாப்புப் படையினர் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில், “லாஸ் ஏஞ்சல்ஸில் நிலைமை மோசமாக உள்ளது. அங்கு ராணுவம் வரவழைக்கப்படும்,” என எச்சரித்துள்ளார்.
 
இதனிடையே, ட்ரம்ப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva